Tuesday, September 30, 2008

திருச்சியில் குரல்வள பாதுகாப்பு பட்டறை

Sep 28th 2008, Anna Science and Technology Centre, Trichy

மூச்சுப்பயிற்சியால் குரல்வளத்தை பாதுகாக்கலாம்: ஆசிரியர்களுக்கு இ.என்.டி., டாக்டர், 'அட்வைஸ்'திருச்சி: ""தமிழ் மருத்துவ புத்தகங்களில் உள்ளது போல் உள்ளங்கால் முதல் உச்சஞ்தலை வரை இழுத்து மூச்சுப்பயிற்சி செய்தால் குரல் வளத்தை பாதுகாக்கலாம்,'' என்று சென்னை சிவா மருத்துவமனை எம்.டி., டாக்டர் குமரேசன் பேசினார். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், திருச்சி அண்ணா கோளரங்கம், சென்னை சிவா இ.என்.டி., மருத்துவமனை மற்றும் காரைக்குடி சித்த மருத்துவ குருகுலம் ஆகியவை இணைந்து, "ஆசிரியர்களுக்கான குரல் வளபாதுகாப்பு' பற்றிய பயிற்சி பட்டறையை நடத்தின. திருச்சி அண்ணா கோளரங்கத்தில் நடந்த பயிற்சி பட்டறையில் மாவட்டம் முழுவதும் இருந்து 101 ஆசிரியர் கலந்து கொண்டனர்.குரல்வள பாதுகாப்பு பயிற்சி பட்டறையை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் ஐயம்பெருமாள் துவக்கிவைத்தார். துவக்கவிழாவில் சென்னை சிவா இ.என்.டி., மருத்துவமனையில் எம்.டி., டாக்டர் குமரேசன், மனஅழுத்த நிபுணர் டேவிட், யோகா வல்லுனர் ஆறுமுகம், சித்த மருத்துவர் சொக்கலிங்கம், ஏ.இ.ஓ., ஜெயராமன், திருச்சி அண்ணா கோளரங்கத்தின் திட்ட அலுவலர் அழகிரி சுவாமிராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவில் சென்னை சிவா இ.என்.டி., மருத்துவமனை எம்.டி., டாக்டர் குமரேசன் பேசியதாவது: பொதுவாக குரல் பாதிப்பு என்றால் அது சளித்தொல்லை தான் என்று நினைக்கின்றனர். அது தவறானது. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கத்தி பேசினாலோ, உணர்ச்சி வசப்பட்டு பேசினாலோ தான் மாணவர்கள் பயப்படுகின்றனர் என்று நினைப்பதும் தவறு. கத்தி பேசுவதால் குரலுக்கு தான் பாதிப்பு ஏற்படும்.தமிழ் மருத்துவ புத்தகங்களில் குரல்வளத்தை பாதுகாக்க மூச்சுப்பயிற்சி தேவை என்று உள்ளது. ஆங்கில முறைப்படி நுரையீரலில் இருந்து தொண்டை, மூக்கு வரை நன்றாக மூச்சை இழுத்துவிட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதுதான் தமிழ் மருத்துவ புத்தங்களில் உள்ளங்கால் முதல் உச்சஞ்தலை வரை இழுத்து மூச்சு விடவேண்டும் என்றும், அது குரல்வளத்தை பாதுகாக்கும் என்று சொல்லியுள்ளது. இதுபோன்று உள்ளங்கால் முதல் உச்சஞ்தலை வரை மூச்சு விட முடியுமா என்று சந்தேகம் தோன்றும். தாரளமாக முடியும். அதற்கு மூச்சுவிடும் போது அடிவயிற்றை நன்றாக அசைத்துக் கொடுத்தால் போதும். அடிவயிற்றை அசைவு கொடுத்து மூச்சு விடுவதால் சுவாச பயிற்சி சிறப்பாக அமையும். குரல்வளமும் நன்றாக இருக்கும். புற்றுநோய் மற்ற இடங்களில் வந்தால் சீக்கிரம் தெரியாது.ஆனால் தொண்டையில் ஏற்படும் புற்றுநோய் உடனடியாக தெரிந்துவிடும்.

மேடைப்பேச்சாளர்கள், ஆசிரியர்கள், பாடகர்கள் உள்ளிட்ட குரலை மூலதனமாக வைத்து இருப்பவர்கள் கழுத்தை இறுக்கி நிலையில் பேசக்கூடாது. இலகுவாக கழுத்தை வைத்துக் கொண்டு பேசவேண்டும். அந்தகாலத்தில் பாட்டு கற்றுக் கொள்பவர்கள் கழுத்துவரை தண்ணீரில் நின்று கற்றுக் கொள்வர். அதுவும் ஒருவகை குரல்வள பாதுகாப்பு முறைதான். இப்போது பாடல் கற்றுத்தருபவர்கள் ராகத்தை இழுத்து பாடுவதில் குரல்வள பாதுகாப்பு பயிற்சி இருந்தது. அதையெல்லாம் நாம் இப்போது செய்வது கிடையாது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் போது ராகத்தோடு சொல்லித்தந்தால் குரல் வளம் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments: